Friday, May 6, 2011

அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (2)

எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்து,  ஏழ்மையில் வளர்ந்து,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  இளங்கலைப் படிப்பை முடித்து, புதுச்சேரியில் முதுகலைப் படிப்பு 
(பிரெஞ்சு இலக்கியம்) படித்துக்கொண்டிருந்த வேளையில் கல்லூரி விடுதியில் சேர முடியாததால்,  ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். வருடம் 1975.  வாடகை ரூபாய் 25.

புதுவை ஆரோவிந்தோ ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார வட இந்தியருக்குச் சொந்தமான வீடு இது (கான்டீன் தெரு). வீட்டின்  நுழைவாயிலில் இரும்பாலான ஒரு பெரிய  கதவு. கதவைத்திறந்து உள்ளே வாகனங்கள் நிறுத்த இடவசதி உண்டு. அந்த இடத்தின் அருகே எனது ஏழைக்குடில்.

இந்த வீட்டின் பெரும் பகுதியில் ஒரு வயதான வடஇந்திய தம்பதியர் வசித்து வந்தனர். பாதுகாப்பு காரணமாக இரவு ஒன்பது மணிக்கு அந்தப் பெரிய கதவு உட்பக்கமாக தாழிடப்படும். 
புதுவையில் உள்ள பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் தன் விலை உயர்ந்த ( RAAJDOOT ) மோட்டார் சைக்கிளை நிறுத்துவார்.  ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த "பாபி" என்ற படத்தில் வரும் அதே சிகப்பு நிற வண்டி. அன்று புதுவையில்  இந்த வண்டி அவனிடம் மட்டும்தான் இருந்தது. அதனால் பெண்கள் மத்தியில் இவன் பிரபலம்.


பல இரவுகளில் பெண்களுடன் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வருவான். அவன் எப்பொழுது வந்தாலும்  கதவைத்திறந்து விடுவது என்னுடைய நிலை. அவன் ஒருபொழுதும் மருந்துக்குக்கூட நன்றி சொல்லியதில்லை.  காலச்சக்கரம் சுழன்றது.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு, பாரிஸ் வந்த முதல் நாளில், இந்திய உணவு விடுதியில் நுழைந்தபோது, புதுவையில் நான் யாருக்கு கதவைத்திறந்து விட்டேனோ, அவன் எனக்கு கதவத் திறந்துவிட்டான். பின்பு அவனே எங்களுக்கு உணவு பரிமாறினான்.  அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனை சங்கடப்படுத்த வேண்டாமென்று, நானும் காட்டிக் கொள்ளவில்லை. போகும்பொழுது அவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

அன்று இரவு மற்றுமொரு இனிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

தொடரும் 

  

0 comments:

Post a Comment

 
Powered by Blogger